ஏ.டி.எம்களில் பாதுகாப்பு அலாரம் அவசியம் – வங்கி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் வங்கி ஏடிஎம்களில் எச்சரிக்கை அலாரம் பொருத்துவது உட்பட முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் ஸ்ரீதர், சண்முகவேலு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏ.டி.எம் மையங்கள் பாதுகாப்பு குறித்து 10 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது.
வங்கி ஏ.டி.எம் மையங்களில் கண்டிப்பாக எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும். ஏ.டி.எம் மையத்திற்கு வெளியிலும் கேமரா அமைக்க வேண்டும்.
இளம் வயதான காவலாளிகள்தான் பாதுகாவல் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.
பெரிய அளவில் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுத்துச்செல்லும்போது பலத்த பாதுகாப்போடு எடுத்துச்செல்லவேண்டும். பணம் எடுத்துச்செல்லும் ஊழியர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
அந்த ஊழியர்களை பணி அமர்த்தும்போது, அவர்கள் பற்றி போலீஸ் மூலம், தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற 10 அறிவுரைகளை கட்டளைகளாக வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.