பேச்சுவார்த்தை தோல்வி.. வரும் 12ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு
சென்னை: டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை எதிர்த்தும் வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பு நேற்று டெல்லியில் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், வங்கி நிர்வாகங்கள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடந்ததை அடுத்து வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில், ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்ப்பாளர்களுக்கு உரிய பதில் அளிக்க நிர்வாகம் முன்வரவில்லை. அதேபோல், ஐடிபிஐ வங்கியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் உரிய பதில் கிடைக்கவில்லை.
மேலும் வாராக்கடன்களை குறிப்பாக பெரும் முதலாளிகளின் வாராக்கடன்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அரசாங்கமோ, வங்கி நிர்வாகங்களோ இந்த பிரச்சினையை ஏற்றுக்கொள்ளாமல் புதிய பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் புதிய பகுதியாக இந்த திட்டங்கள் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.
இருப்பினும் தற்காலிகமாகவாவது வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயமாக்கலை நிறுத்தி வைக்குமாறு கூறினோம். அதற்கு நிர்வாகம் சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே வருகிற 12, 13-ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட சங்க நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி 12-ம் தேதி ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளின் பணியாளர்கள் சுமார் 45 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அடுத்த நாளான 13-ம் தேதி அனைத்து வங்கி பணியாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.