வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு !
சென்னை: நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை எதிர்த்தும் வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஜூலை 12- ஆம் தேதி ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகளும், ஜூலை 13 ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.