வங்கிகள் இன்று நாடு தழுவிய ஸ்டிரைக்.. ஊழியர்களின் முக்கிய கோரிக்கை என்ன தெரியுமா?
சென்னை: அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கான கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று, கடனை திருப்பி செலுத்தாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.
அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாச்சலம் இதுகுறித்து செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்திய வங்கி தொழிலை நசிவடையச் செய்வது வராக்கடன் பிரச்சினைதான். வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய அவசிய தேவை" என்றார்.
இன்றைய போராட்டத்தில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். 2016-17 நிதியாண்டு பொருளாதார ஆய்வறிக்கை சிபாரிசுப்படி, மத்திய அரசு, சொத்து மீட்பு ஏஜென்சி ஒன்றை அமைக்க வேண்டும். கஷ்டமான கடன் வசூலை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வெங்கடாச்சலம் கூறுகையில், இந்த நடவடிக்கையால் வங்கிகளுக்கு பலன் இல்லை என்கிறார். பொறுப்பு ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு மாற்றப்பட்டுகிறது அவ்வளவுதான். சில வருடங்களுக்கு முன்பு, ஐடிபிஐ வங்கியின் வராக் கடன் ரூ.9000 கோடியாக இருந்தது. இது சொத்து நிலைத்தன்மை ஃபண்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது ஐடிபிஐ வங்கியின் ஆதாயமில்லா சொத்து மதிப்பு ரூ.20000 கோடியாக உயர்ந்துள்ளதுதான் மிச்சம். இதற்கு காரணம், அதிகப்படியான சலுகை கொடுத்தே வராக்கடன் வசூலிக்கப்படுவதுதான் என்றார் அவர்.
கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான், வங்கிகளை காப்பாற்ற முடியும் என்பதே இன்றைய போராட்டத்தின் முக்கிய நோக்கம்.