வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க இனி வங்கிப் பணபரிமாற்றம் கண்காணிக்கப்படும்- ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வங்கிகளில் நடைபெறும் பணபரிமாற்றம் அன்றாடம் கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.மேலும் வங்கி கணக்கு பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பேசிய ராஜேஷ் லக்கானி, "எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த தலா 2 தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். இதற்காக டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் கமிஷனின் செயலாளர் வில்பிரட் என்ற அதிகாரி வந்தார்.
வேட்புமனு தாக்கலின் போது மேற்கொள்ளவேண்டிய சட்டரீதியான நடைமுறைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். இந்த 64 பேரும் அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மற்ற அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக எப்படி அறிக்கை அனுப்பவேண்டும் என்பது பற்றியும் அவர்களுக்கு சொல்லித் தரப்பட்டு உள்ளது.
அனைத்து வங்கி பண பரிமாற்றமும் கண்காணிக்கப்பட உள்ளது. எந்தெந்த வங்கியில் இருந்து எவ்வளவு பணம் யாருக்குப் போய் இருக்கிறது? தொடர்ந்து யார், யார்? பணம் பெற்று வருகின்றனர்? என்பது போன்ற விவரங்களை கண்காணிக்க இருக்கிறோம்.இதுதொடர்பாக அன்றாடம் நடக்கும் வங்கி பண பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் தினமும் மாலை நேரத்தில் எங்களுக்கு அனைத்து வங்கிகளும் அனுப்பிவிடும். வருமான வரித்துறையும் இந்த பரிவர்த்தனையை தனியாக கண்காணித்து வருகிறது.வேட்புமனு பரிசீலனை நடக்கும் ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தேர்தல் பார்வையாளர்கள் இருக்கவேண்டும். எனவே ஏப்ரல் 29 ஆம் தேதியன்றே தமிழகத்துக்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.
மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு நடக்கவேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுகிறேன். அதிகபட்ச வாக்குப்பதிவே எனது இலக்கு. இதில் மற்ற மாநிலங்களைவிட சாதனை படைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.