வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்காமல் மக்களை வதைக்கும் வங்கிகள்- ராமதாஸ் கண்டனம்
சென்னை: மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுக் கடன் வட்டியை குறைக்காமல் வசூலிக்கும் வங்கிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி குறைத்த பிறகும் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை குறைக்க பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் மறுத்து வருகின்றன.
இதனால் வீட்டுக்கடன் வாங்கிய கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளின் இந்த செயலை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது.
வாரக்கடன் காரணமாம்:
வீட்டுக்கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்காததற்காக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் காரணம், ‘‘வங்கிகளின் வாராக்கடன் விகிதம் அதிகரித்து விட்டதால், அதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிப்பதற்காக வட்டிக் குறைப்பை சிறிது காலத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறோம்'' என்பது தான். இது ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் ஆகும்.
கோடிகோடியாய் கடன்:
பொதுத்துறை வங்கிகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளன. அதற்குப் பிறகும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.3,41,641 கோடியாக உள்ளது. இடைப்பட்ட காலத்தில் வாராக்கடன் அளவு இன்னும் அதிகரித்திருக்கலாம்.
சத்தமில்லாமல் தள்ளுபடி:
இக்கடன்களும் அடுத்த சில மாதங்களில் சத்தமில்லாமல் தள்ளுபடி செய்யப்படலாம். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் திட்டமிட்டே வங்கிகளை ஏமாற்றும் நோக்கத்துடன் உருவாக்கும் வாராக்கடன்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைக்காமல் வசூலிப்பது எந்த வகையான பொருளாதார உத்தி? என்பதை வங்கிகளும், மத்திய அரசும் தான் விளக்க வேண்டும்.
சேவை மனப்பான்மை இல்லை:
உலகின் வலிமையான வங்கிகள் என்று போற்றப்படும் இந்திய பொதுத்துறை வங்கிகள் அண்மைக் காலமாக சேவை மனப்பான்மையை மறந்துவிட்டு, லாப நோக்கத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இது நல்லதல்ல என்பதை வங்கிகளுக்கு உணர்த்தி, வீட்டுக் கடன் மீதான வட்டியை மறு ஆய்வு செய்து இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்த அளவுக்கு குறைக்க வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.