வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி, வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டன.
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிடவேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளில், அவுட்சோர்சிங் அனுமதிக்க கூடாது, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினருடயது.
இக்கோரிக்கைகள் தொடர்பாக தலைமை தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் கடந்த 21ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை தோல்வி
அப்போது வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வங்கிகளின் நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை என்பதால் இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் குதித்துள்ளனர்.
7 சங்கங்கள் சார்பில் போராட்டம்
பாஜகவின், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய இரண்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய 7 சங்கங்கள் வேலை நிறுத்ததில் பங்கேற்கின்றன.
தனியார் வங்கிகள் நிலை
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி, வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டன. ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ், கோடக் மகிந்திரா ஆகிய தனியார் வங்கிகளிலும் வங்கி பணி இன்று பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிமினல் குற்றவாளிகள்
கனரா வங்கி ஊழியர் சங்க தலைவர் அஜய் மஞ்சரேக்கர் கூறுகையில், சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தனியார் வங்கி ஊழியர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே கடனை கட்டாதவர்களை கிரிமினல்களாக அறிவிக்க வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கைகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட கிரிமினல்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது, ஹோட்டல்களில் தங்க முடியாது. இதுபோன்ற நடைமுறை சீனாவில் உள்ளது என்றார் அவர்.