பணமில்லை என கை விரித்த வங்கிகள்.. சென்னை, காஞ்சி, மதுராந்தகத்தில் மக்கள் மறியல்
செல்லாத நோட்டுக்களை மாற்றச் செல்லும் போது பணமில்லை என பல வங்கிகள் கைவிரிப்பதால் மக்கள் கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: சென்னை திருவொற்றியூர் இந்தியன் வங்கியில் பணம் இல்லை என்று அறிவித்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணம் கிடைக்காத காரணத்தால் கோபமடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் புழக்கத்தில் விடப்படாததாலும், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததாலும் பல்வேறு வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதை தடுக்க விரலில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.4,500க்குப் பதிலாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
விரலில் மை, ரூ.2000 ஆக குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கூட்டம் குறைந்தது.
ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும் ரூபாய் நோட்டுகள் அளவு குறைக்கப்பட்டது. புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டும் குறைந்த அளவில் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.
திணறும் வங்கிகள்
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளும் பற்றாக்குறை ஆனதால் பணத்தட்டுப்பாட்டால் பொதுமக்களுக்கு வங்கிக்கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடியவில்லை. வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24,000 வரை எடுக்கலாம் என்றாலும் அதைக் கொடுக்க பணம் இல்லாமல் அனைத்து வங்கிகளும் திணறி வருகின்றன.
ரொக்கமாக கேட்கும் ஊழியர்கள்
அரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் அடுத்த வாரம் 1ஆம் தேதி சம்பளத்தையும் ஏடிஎம்மில் எடுக்க முடியாமல் போய் விட்டால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போய் விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாக தருமாறு தனியார் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏடிஎம்களில் மாற்றம்
ஏடிஎம்களில் ரூ.500, ரூ.2000 புதிய நோட்டுகளை விநியோகிக்கும் வகையில் தொழில்நுட்பத்திலும், வடிவத்திலும் மாறுதல் செய்தால் பணத்தட்டுப்பாடு பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி தற்போது ஏடிஎம்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 10,200 ஏடிஎம்களில் புதிய நோட்டுகளை வெளியிடும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
செயல்படாத ஏடிஎம்கள்
நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்து 2 ஆயிரம் ஏடிஎம்களிலும் மாற்றங்கள் செய்து முடிக்க 10 முதல் 12 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஏடிஎம்கள் முழுமையாக செயல்படத் தொடங்கியதும் மாத சம்பளக்காரர்கள் ரூ.100, ரூ.500 நோட்டுகளைப் பெற்று பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூச்சல் தள்ளுமுள்ளு
இரு தினங்களுக்கு முன்பு ராயபுரம் சூரிய நாராயணா தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றவும், வங்கியில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது வங்கி அதிகாரிகள், புதிய ரூபாய் நோட்டுகள் வராததால் பணத்தை மாற்றித்தரவோ அல்லது கணக்கில் இருந்து எடுக்கவோ முடியாது என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கி முன்பு திடீரென கூச்சலிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
வங்கியில் பணமில்லை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில் பணமில்லை என்று அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உதவி மேலாளர் கூறும் போது,
ரிசர்வ் வங்கியில் இருந்து தேவையான அளவுக்குப் பணம் வராததால் பணப்பரிமாற்றப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு உச்சவரம்பு தொகை ரூ.24,000 தர முடியாமல் ரூ.2,000, ரூ.5,000 வரை கொடுக்கிறோம். ஐ.ஓ.சி. கிளைகளில் விரலில் மை தடவி ரூ.2,000 மாற்றி கொடுக்கிறோம் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உதவி மேலாளர் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் போராட்டம்
காஞ்சிபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் பணம் இல்லை என்று ஊழியர்கள் அறிவித்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல மதுராந்தகத்தில் பணமில்லை என்று கூறி செல்லாத நோட்டுக்களை மாற்றித்தர மறுத்து விட்டதால் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூரில் போராட்டம்
திருவொற்றியூர் இந்தியன் வங்கியில் பணம் இல்லை என்று அறிவித்ததால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணம் கிடைக்காத கோவத்தால் கோபமடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. செல்லாத நோட்டு விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி எச்சரித்தது நினைவிருக்கலாம்.