கேரளாவில் தடை செய்யப்பட்ட பாக்கெட் பால் தமிழகத்தில் விற்பனை- ஆட்சியரிடம் பகீர் புகார்
கேரள மாநில அரசு தடை செய்த பாக்கெட் பால் விற்பனை கன்னியாகுமரி மாவட்டத்தில் படு ஜோராக நடந்து வருகிறது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: கேரள அரசு தடை செய்த தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பால் விற்பனை தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிப்படையாக நடந்துவருகிறது.
கேரள மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பாலினை குமரி மாவட்டத்தில் பெயர் மாற்றி விற்பனை செய்து வரும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பாக, மாதிரி பால் பாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மைக் காலமாக தனியார் பால் நிறுவனங்கள் மீது கடும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சும் அமைந்திருந்தது.
இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தடை செய்யப்பட்ட பாக்கெட் பாலினை பல தனியார் நிறுவனங்கள் குமரி மாவட்டத்தில் பெயர் மாற்றி விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பால் கெட்டு போகாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைடு, யூரியா உள்ளிட்ட பல்வேறு வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும், இந்த பாலை வாங்கி அருந்துவதால் பலவகையான நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தனியார் பால் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பாலினை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தடை செய்ய வேண்டும், என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானிடம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புப்பினர் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.