சென்னையில் இன்று முதல் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை: கமிஷனர் கரன் சின்ஹா உத்தரவு
சென்னையில் மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு சென்னை காவல் துறை ஆணையர் கரன் சின்ஹா தடை விதித்துள்ளார்.
சென்னை: சென்னையில் இன்று முதல் 2 மாதங்களுக்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையர் கரன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பட்டம் பறக்க விடுவதற்குப் கண்ணாடித் துகள்கள் கலந்த சீன மாஞ்சா நூல்கள் மற்றும் நைலான் நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் இன்று முதல் 2 மாதங்களுக்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து மாநகர காவல் துறை ஆணையர் கரன் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். மேலும், மாஞ்சா நூல் விற்பனை செய்தாலோ, மறைத்து வைத்திருந்தாலோ வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே 2015-ம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதிமன்றம் மாஞ்சா நூல் தயாரிப்பைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நாடு முழுவதும் மாஞ்சா நூலைத் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.