அமைச்சர் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முடிதிருத்துவோர் நல சங்கம் எச்சரிக்கை
தங்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: முடி திருத்துவோரை இழிவாகப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும், அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக முடி திருத்துவோர் நல சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி கடலூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை முடிதிருத்தும் தொழிலை சம்பந்தப்படுத்தி தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், முடி திருத்துவோர் பற்றியும் இழிவாக அமைச்சர் கூறியதாக தெரிகிறது.
அதிமுக அமைச்சர் பொது மேடையிலேயே இவ்வாறு தரக்குறைவான வார்த்தைகளை பேசியதற்கு திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், முடி திருத்துவோர் நலச்சங்கத்தினர் அமைச்சரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்தகைய பேச்சு தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதால் மேலும் அமைச்சர் சி.வி.சண்முகம் தாம் இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு கேட்காவிட்டால், அவரை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அச்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.