தலைவன்... தஞ்சையில் ஜொலிக்கும் பாஸ்கரனின் போஸ்டர்கள்
சுதந்திர தினத்தன்று தஞ்சை நகரின் முக்கிய பகுதிகளில் பாஸ்... தலைவன் போஸ்டர்கள் கண்ணை பறித்தன. ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாருடா என்று பேசிக்கொண்டனர் சிலர். சில காலம் போஸ்டர், பேனர் என எதுவும் ஒட்டாமல் அமைதியாக இருந்த பாஸ்கரன் மீண்டும் போஸ்டர் ஒட்ட காரணம் என்ன என்றும் அதிமுகவினர் தங்களுக்குள் கேட்டுக்கொள்கின்றனர்.
சசிகலா அக்கா வனிதாமணி மீது தனி பாசம் கொண்டவர் ஜெயலலிதா. அதனால்தான் அவருடைய மூன்று மகன்களான டி.டி.வி.தினகரனுக்கு கட்சியில் முக்கிய பதவியும், இரண்டாவது மகனான பாஸ்கரனுக்கு ஜெ ஜெ டி.வி. நிர்வாக பொறுப்பும், இளைய மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகவும் வளர்த்தார். ஆனால், எல்லாம் சில காலம்தான். இவர்கள் போயஸ் தோட்டத்தில் இருந்து ஒரங்கட்டப்பட்டனர்.
பாஸ்கரனின் தலைவன்
சுதாகரன் நிலையே பரிதாபகரமாக உள்ளது. டிடிவி தினகரனோ எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் பாஸ்கரன் தன்னை தலைவன் என கூறி கொண்டு சினிமாவில் கதாநாயகனா நடிக்க தொடங்கினார். படத்துக்கு தலைவன் என தலைப்பும் வைக்க அதிமுக தலைமைக்கு கோபம் அதிகமானதாம்.
படம் ரிலீஸ் ஆகலையே
படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை, அதற்கு காரணம் மேலிடத்தின் கோபமே என் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். படத்தின் இயக்குனரும் படத்தில் இருந்து விலகி கொண்டார்.
போஸ்டருக்கு குறைவில்லை
இப்போதெல்லாம் முக்கிய விழா நாட்களில் பாஸ்கரனின் படம் போட்டு 'பாஸ் தலைவன்' என அச்சடிக்கபட்ட மெகா சைஸ் கலர் போஸ்டர்கள் தமிழகம் முழுக்க ஒட்டப்படுகிறது. சென்னையிலும் கடற்கரை சாலை, காமராஜர் சாலைகளில் ஒரு சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்த நிலையில் சுதந்திர தினத்தன்று தஞ்சாவூரில் பாஸ் தலைவன் போஸ்டர்தான் பளபளத்தது.
ரசிகர்கள் போஸ்டர்
படமே ரிலீஸ் ஆகலையே அதற்கு முன்பே ரசிகர் மன்றம் ஆரம்பித்து பரபரப்பாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இது பாஸ்கரன் மீதான கோபத்தைதான் அதிகப்படுத்தும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
போஸ்டர் ஒட்டுவது ஏன்?
ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான ம.நடராசன், மகாதேவன், திவாகரன்,டாக்டர் வெங்கடேஷ் என அனைவரும் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாகி அமைதியாக இருக்கும் நிலையில், பாஸ் மட்டும் ஏன் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்று கேட்கின்றனர் அதிமுகவினர்.