கட்டையால் அடித்த பாட்டி.. ஆக்சா பிளேடால் தாக்கிய பேத்தி.. பயங்கர மோதல்.. கடைசியில் பாட்டி சாவு
சென்னை: அடிக்கடி செல்போனில் பேசியதைக் கண்டித்த பாட்டியைக் குத்திக் கொலை செய்த பேத்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த போரூர் பார்வதி அவென்யூ, சக்தி நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் சுப்பையன் (52). இவருக்கு சித்ரா (48) என்ற மனைவியும், கனிமொழி (22) என்ற மகளும் உள்ளனர். கனிமொழி என்ஜினீயரிங் படித்துள்ளார்.
சித்ரா சொந்த ஊரில் நர்சாக வேலை செய்வதால் அவர் இங்கு வரவில்லை. இவர்களுடன் சுப்பையனின் 76 வயது தாய் மங்களமும் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி அரை நிர்வாண நிலையில் கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார் மங்களம்.
இக்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கனிமொழி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தார். இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார் கனிமொழி.
அதாவது, என்ஜினீயரிங் முடித்துள்ள கனிமொழி, மேல்படிப்பு படிக்க கடந்த 20 நாட்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
கனிமொழி அடிக்கடி தனது தோழிகள் மற்றும் காதலனுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை பாட்டி மங்களம் கண்டித்துள்ளார். இதனால், கனிமொழிக்கும், அவரது பாட்டிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று சுப்பையன் வேலைக்குச் சென்று விட, பாட்டிக்கும், பேத்திக்கும் இடையே வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மங்களம் கட்டையால் கனிமொழியை அடித்துள்ளார்.
தன் பெற்றோர்களே இதுவரை தன்னை அடிக்காத போது, பாட்டி கட்டையால் அடித்து விட்டாரே என மங்களம் மீது கனிமொழிக்கு கோபம் ஏற்பட்டது. எனவே, சண்டை முடிந்து தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை அவர் ஆக்சா பிளேடால் அடித்துள்ளார். திடுக்கிட்டு விழித்த மங்களம், தனது பாதுகாப்பிற்காக தலையணைக்கு அடியில் வைத்திருந்த கத்தியால் கனிமொழியை குத்த முற்பட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட கனிமொழி அந்தக் கத்தியை பிடுங்கி, மங்களத்தின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே மங்களம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தான் செய்த கொலையை மறைக்க நினைத்த கனிமொழி, தனது அறையை சாத்திவிட்டு மர்மநபர்கள் வந்து பாட்டியை கொலை செய்து விட்டு சென்று விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
மேலும் சுப்பையன், துளசி என்ற பெண்ணோடு தொடர்பு வைத்து இருந்தார். கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணிடம் அவர் பேசுவதை தவிர்த்ததால், அந்த பெண் தனது உறவினர்களோடு சேர்ந்து அடிக்கடி சுப்பையன் வீட்டிற்கு வந்து மங்களத்தை மிரட்டி விட்டு சென்றார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கனிமொழி அவர்கள் தான் பாட்டியை கொலை செய்து விட்டு சென்றார்கள் என போலீசாரின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கனிமொழியைக் கைது செய்த போலீசார், அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
செல்போன் சண்டையில் பேத்தியே பாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.