குப்பை அகற்றும் பணியில் இளைய சமுதாயம்- மெரீனாவில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை: மெரீனாவில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரீனா கடற்கரையில் குப்பை அகற்றும் பணி நேற்று நடந்தது. அதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும், பெரும்பாலான சுற்றுலா பயணிகளும், சென்னை வாசிகளும், தங்கள் விருப்பம் போல், குப்பையை வீசி விட்டு செல்கின்றனர்.
அவர்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில் குப்பை அகற்றும் விழிப்புணர்வு முகாம் மெரீனா கடற்கரையில் நேற்று நடத்தப்பட்டது.
காலை, 8:30 மணிக்கு துவங்கிய குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுடன் மாநில கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி, பச்சையப்பன், லயோலா, எத்திராஜ், வைஷ்ணவா, குருநானக் கல்லூரிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
ஈடுபட்டனர். அப்போது, மெரீனாவில் கடை வைத்திருப்போர் மற்றும் நடைபயிற்சியில் ஈடுபட்டோரிடம், கடற்கரையில் குப்பை வீசுவதால் ஏற்படும் தீமை குறித்து, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொது இடங்களை தூய்மையாக வைத்து கொள்வதில், அனைவருக்கும் பங்கு உண்டு. பெரும்பாலானோருக்கு, அது, புரிவதில்லை. வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்போர் கூட, பொது இடங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.