தண்ணித் தொட்டி தேடி வந்த கரடி... தென்னை மரத்தில் ஏறி “இளநீர்” குடித்தது!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் தேடி ஊர்க்குள் புகுந்த கரடி ஒன்று தென்னை மரத்தில் ஏறி இளநீர் குடித்த காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
மழை இல்லாத காரணத்தால் நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு ஊருக்குள் வரும் வனவிலங்குகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் கவலைக்கு ஆளாகின்றனர்.
கரடி...
இந்நிலையில் மணிமுத்தாறு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வெளியே வந்த கரடி ஒன்று அருகில் இருந்த தோட்டப்பகுதியில் புகுந்தது. அங்கிருந்த பயிர்களையும் அது சேதப்படுத்தியது.
இளநீர் குடித்தது...
தோட்டத்திற்குள் கரடி புகுந்த தகவல் அறிந்து கிராம மக்கள் அங்கு குவிந்தனர். பொதுமக்களைப் பார்த்ததும் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்றில் ஏறியது கரடி. பின்னர் அதில் இருந்த இளநீரைப் பறித்துக் குடித்தது.
வனத்துறையினர் வருகை...
இதனை ஆச்சர்யத்துடன் வேடிக்கைப் பார்த்த அப்பகுதி மக்கள், கரடி தோட்டத்திற்குள் புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனகாப்பாளர் மோகன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் 12 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கரடியை காட்டுக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர்.
விரட்டியடிப்பு...
பின்னர் தீப்பந்தம் ஏற்றி காட்டியதும் கரடி மரத்தைவிட்ட இறங்கி ஓடியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.