ஊருக்குள் புகுந்த கரடியால் பீதி - பொதுமக்கள் வீடுக்களில் முடக்கம்
களக்காடு: களக்காடு அருகே கிராமத்திற்குள் கரடி புகுந்ததால் கிராம மக்கள் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் அங்கு பீதி நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது துவரைக்குளம். இரவு அங்குள்ள சங்கரப்பாண்டி என்பவரது தோட்டத்தில் உள்ள முட்புதரில் கரடி புகுந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற அதே ஊரே சேர்ந்த அம்பிகா என்பவர் கரடி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் சத்தம் போடவே, அந்த சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் கரடி அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
ஓடிய கரடி அடுத்த தெருவுக்குள் நுழைந்து விட்டது. அங்குள்ள தெருவில் கரடி சுற்றி திரிந்துள்ளது. இதை பார்த்த பெண்கள் அலறி அடித்து ஓடி வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர். இந்நிலையில் மீண்டும் கரடி உலா வந்ததால் பொது மக்கள் ஒன்றாக கூடி கரடியை அங்கிருந்து விரட்டி அடித்தனர். கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து அங்கு சோதனை நடத்தினர். அவர்கள் இரவு பகலாக கரடியை தேடி வருகின்றனர். பல இடங்களில் கரடியை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். கரடியை பார்த்த அம்பிகா கூறுகையில், கரடி நடமாட்டத்தால் வெளியே வர முடியவில்லை. நாங்கள் சிறு குழந்தைகளை வைத்துள்ளோம். கரடியால் குழந்தைகளுக்கு ஆபத்து வரமோ என்று பயமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் பீதி நிலவி வருகிறது.