கோத்தகிரி தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி... பீதியில் பொதுமக்கள்! - வீடியோ
கோத்தகிரி தேயிலை தோட்டங்களுக்குள் கரடி புகுந்துள்ளதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வனத்துறையினர் அதனைப் பிடித்து வனத்துக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி: கோத்தகிரி தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரியும் கரடியைப் பிடித்து வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என கோத்தகிரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல விலங்குகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்த விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதால், அது தங்களை தாக்கிவிடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் நடமாடவே பயப்படுகின்றனர்.
வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், சமீபகாலமாக இந்தப் பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் காட்டை விட்டு வெளியேறும் விலங்குகள் ஊருக்குள் இருக்கும் ஆடுகளை கொன்று உண்ணும் சம்பவங்களும் நடக்கின்றன.
இந்நிலையில் கோத்தகிரி தேயிலை தோட்டங்களில் கரடிகள் நடமாட்டத்தைக் கண்ட பொதுமக்கள் காட்டுக்குள் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். ஆகையால் வனத்துறையினர் கூண்டுகளை வைத்து கரடியைப் பிடித்து வனத்துக்குள் அனுப்பி தங்களைக் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.