விழுப்புரம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த கரடி... பீதியில் பொதுமக்கள்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் சுற்றித் திரியும் கரடியால் அப்பகுதிமக்கள் பீதியடைந்துள்ளனர். கரடியை பிடித்து காட்டிற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது கண்டமங்கலம் கிராமம். விழுப்புரம்-புதுச்சேரிக்கு இடைப்பட்ட அந்த கிராமப் பகுதியில் சவுக்கு மரங்கள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளரி, மரவள்ளி கிழக்கு, கரும்பு உள்ளிட்டவையும் அங்கு பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் விவசாய வேலைக்கு சென்ற சிலர், அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம மக்கள் அப்பகுதியில் கரடியை தீவிரமாக தேடிப்பார்த்துள்ளனர். இதனிடையே, அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்ற கரடி பொதுமக்களின் கண்ணில் படாமல் மறைந்துவிட்டதாம்.
அங்கு பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு, கரும்பு, வெள்ளரி ஆகிய பயிர்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால், கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பாக, கிராமப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியை காட்டுப் பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.