தேனீ கொட்டிய அதிமுக எம்எல்ஏ... பாதியில் நின்ற ஜெயலலிதாவிற்கான பூஜை
அதிமுக எம்எல்ஏவை தேனீ கொட்டியதால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய நடத்தப்பட்ட பூஜை பாதியில் நின்றது.
ஆம்பூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று நடத்தப்பட்ட பூஜையின் போது தேனீக்கள் கொட்டியதால் எம்எல்ஏ பாலசுப்பிரமணிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு யாகங்கள், பூஜைகள், பால்குட ஊர்வலங்கள், காவடி ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆம்பூர் அருகே வடசேரியில் அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணி பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அந்தப் பூஜை நடந்து கொண்டிருக்கும் போதே அந்தப் பகுதியில் இருந்த தேனீக் கூட்டில் இருந்து தேனீக்கள் பறந்து வந்துள்ளன.
திடீரென தேனீக்கள் பறந்து வந்து அங்கிருந்த பலரையும் கொட்டத் தொடங்கியது. இதில் எம்எல்ஏ பாலசுப்பிரமணிக்கு காயம் ஏற்பட்டது. மேலும், பூஜையில் கலந்து கொண்ட 10க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியுள்ளன.
இதனால், முதல்வர் ஜெயலலிதா குணமடைய செய்யப்பட்ட பூஜை, முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.