சிம்பு மீதான வழக்கை வாபஸ் பெற்ற பாமக பிரமுகர்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு மீது பா.ம.க சார்பில் தொடர்ந்த வழக்கை திடீரென்று இன்று வாபஸ் பெற்றிருக்கிறார் அக்கட்சியைச் சேர்ந்த வெங்கடேஷ்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் மீது ஏராளமான வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் சிம்பு முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற 4ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் பாமக சார்பில் தொடர்ந்த வழக்கை திடீரென்று இன்று வாபஸ் பெற்றிருக்கிறார் அக்கட்சியைச் சேர்ந்த வெங்கடேஷ்.
இந்த வழக்கின் மீது இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருந்த நிலையில் பாமக கட்சியின் மேலிடம் கேட்டுக் கொண்டதால் இந்த வழக்கை வெங்கடேஷ் வாபஸ் பெற்றதாக கூறுகின்றனர்.
இது குறித்து வெங்கடேஷ் கூறும்போது "நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா ராஜேந்தரின் பேட்டி மனதை உருக்கும் விதமாகவும், மன்னிப்பு கோரும் விதமாகவும் இருந்ததால், அவர்களின் பேட்டியை பொதுமன்னிப்பாக கருதி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் சிம்பு மீது தொடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெறுமா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
சிம்பு இந்த வழக்கில் இருந்து வெளியேற வேண்டி நேற்று அவரது குடும்பத்தினர் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுதீஸ்வரர் கோவிலில் யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.