பீப் பாடல்: சிம்பு, அனிருத் நாளை கோவை போலீஸில் ஆஜராவார்களா?
சென்னை: பீப் பாடல் வழக்கில் சிம்புவின் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் வரும் 5 ம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதால் நாளை கோவை போலீசில் சிம்பு, அனிருத் ஆஜராவார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.
சமீபத்தில் வெளியான பீப் பாடல் தமிழகம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் சிம்பு, அனிருத் மீது தமிழ்நாடு முழுவதும் பொதுநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும் இருவருக்கும் எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பீப் பாடல்
மோசமான வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு பாடலை சிம்பு, அனிருத் கூட்டணி சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு எதிராக ஆங்காங்கே ஒரு சில எதிர்ப்புகள் எழுந்து நாளடைவில் தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது.
தமிழ்நாடு முழுவதும்
சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு ஒருசில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து விட்டது. மேலும் இருவருக்கும் எதிரான வழக்குகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
சம்மன்
இந்த வழக்கில் முதன்முதலாக சிம்பு, அனிருத்துக்கு எதிராக கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குத் தொடர்ந்து இருவரையும் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பினர்.
கனடாவில் தஞ்சம்
கனடா சென்ற அனிருத் இந்த வழக்கில் தன் மீதான நாளுக்குநாள் பிடி இறுக்கிக்கொண்டே செல்வதால் இந்தியா திரும்பாமல் அங்கேயே தஞ்சம் புகுந்து விட்டார்.
சிம்பு
இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று கூறிய சிம்பு தன் மீதான சம்மனுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஒத்தி வைப்பு
இந்த மனு மீதான விசாரணை வருகிற 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்று போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார்.மாதர் சங்கத்தினரின் புகார் மற்றும் அவர்கள் அளித்த சி.டி.க்கள் முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னை விரைந்துள்ள கோவை போலீசார் அவற்றை அரசு வக்கீலிடம் காட்டி பதில் மனுவை தயாரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
நாளைய நிலை
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சிம்பு நாளை (19-ந்தேதி) போலீஸ் நிலையத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என தெரிகிறது. போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தர விட்டிருப்பதால் சிம்பு, அனிருத் இருவருமே நாளை கோவை போலீசார் முன்னிலையில் ஆஜராக மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.