பீப் பாடல் வழக்கில், சிம்பு நேரில் ஆஜராகக் காரணம் இதுதான்!
சென்னை: சில மாதங்களாக தொடர்ந்த பீப் பாடல் வழக்கில், சிம்புவைக் கைது செய்ய மாட்டோம், என்று காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே அவர் நேரில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு இன்று காலை கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் இத்தனை மாதங்களாக ஆஜராகாத சிம்பு இன்று காலை நேரில் ஆஜரானது எப்படி? என்ற வினாவிற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
பீப் பாடல் வழக்கில் சிம்பு வருகின்ற 24 ம் தேதிக்குள் கோவை காவல்நிலையம் சென்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் நேற்று கோவை சென்று காட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது சிம்பு நேரில் ஆஜராகும் பட்சத்தில் அவரைக் கைது செய்வீர்களா? என்று அச்சத்துடன் இன்ஸ்பெக்டர் செல்வராஜைக் கேட்டிருக்கிறார்.
"கைது நடவடிக்கை இருக்காது. புகார் குறித்து விளக்கம் அளித்த பின்னர், அதை எழுத்துமூலமாகவும் தெரிவிக்க வேண்டும். மற்ற படி ஒன்றுமில்லை" என்று இன்ஸ்பெக்டர் டி.ராஜேந்தருக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்.
அதன் பிறகே சிம்புவை நேரில் ஆஜர்படுத்த டி.ராஜேந்தர் சம்மதித்தாராம். அதன்படி சிம்பு இன்று காலை காட்டூர் காவல் நிலையம் சென்று, நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.