பீப் பாடல் சர்ச்சை: சிம்பு ஆஜராக ஜனவரி 29 வரை அவகாசம் அளித்தது ஹைகோர்ட்
சென்னை: சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில், சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் சிம்பு ஆஜராக ஜன.29ம் தேதி வரை அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிம்பு எழுதி பாடிய ஆபாச பாடல் விவகாரம் கடந்த ஒருமாதகாலமாகவே சர்ச்சையை கிளப்பி வருகிறது. கோவையில் தொடங்கிய பெண்கள் அமைப்பினரின் போராட்டம் சென்னையில் பரவியது. குமரி வரை மாநிலம் முழுவதும் மகளிர் அமைப்பினர் சிம்பு, அனிருத்து எதிராக போராடினர். சென்னையில் உள்ள அவரது வீட்டு முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிம்பு மீதும், அவர் பாடிய பாடலுக்கு இசை அமைத்ததாக கூறப்படும் அனிருத் மீதும் புகார்கள் கூறப்பட்டது.
கோவை மற்றும் சென்னை போலீசார் சிம்பு, அனிருத் மீது வழக்கு பதிவு செய்தனர். சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருமுறை சம்மன் அனுப்பினர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிம்பு மீது போடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும், அவை ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்பதால், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.
ஜனவரி 11ம்தேதி அன்று விசாரணைக்காக சென்னை போலீசில் சிம்பு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சிம்பு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே கமிஷனர் அலுவலகத்தில் இன்று சிம்பு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான செய்தியாளர்கள் கமிஷனர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே கோவை காவல் நிலையத்திலும், சென்னை காவல் நிலையத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரி சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று திடீரென மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் 29ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அவகாசம் அளித்து உத்தரவிட்டது.