சென்னையில் கொளுத்தும் வெயில்: டாஸ்மாக்கில் 'ஜில்' பீர் விற்பனை ஜோர்
சென்னை: சென்னையில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குளிரூட்டப்பட் பீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் வெயில் தினமும் சென்ச்சுரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. ஏற்கனவே வெப்பத்திற்கு பெயர் போன சென்னையில் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
வெயிலை தாங்க முடியாமல் மக்கள் பகல் வேளையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
கத்திரி வெயில்
கத்திரி வெயில் காலம் துவங்கும் முன்பே வெயிலை தாங்க முடியவில்லை. மே மாதம் வந்து அக்னி நட்சத்திரம் துவங்கினால் என்ன ஆகப் போகிறோமோ என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மோர், இளநீர்
சூட்டை தணிக்க மக்கள் மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, கூழ் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி உட்கொள்கிறார்கள். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
பீர்
சூரியன் உக்கிரத்தில் இருந்து வருவதையொட்டி சென்னையில் உள்ள 'குடி'மகன்களின் கவனம் குளு குளுவென குளிரூட்டப்பட்ட பீர் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் குளிரூட்டப்பட்ட பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
டாஸ்மாக்
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. அதே சமயம் ரம், விஸ்கி ஆகியவற்றின் விற்பனை மந்தமாகியுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் பீர் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.