திருப்பூரில் பரபரப்பு... ஓடும் ரயிலில் 2 பிச்சைக்காரர்கள் மோதல்... கத்திக்குத்து... ஒருவர் கைது!
திருப்பூர்: ஓடும் ரயிலில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் மற்றொருவரை மார்பில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் கோவை விரைவு ரயில், நேற்று மாலை ஒரு மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. திருப்பூர் அருகே வந்தபோது, ரயிலில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து ரயில் திருப்பூரில் நின்றதும், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், அதற்கு முன்னதாகவே ரயிலில் இருந்து இறங்கிய பிச்சைக்காரர்கள் இருவரும், நடைபாதையில் நின்றபடி ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைகாரரின் மார்பில் சிறிய வகை கத்தியால் குத்தியுள்ளார். ஆனால், மார்பில் ரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
விரைந்து செயல்பட்ட போலீசார், காயமடைந்த பிச்சைக்காரரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றொரு பிச்சைக்காரரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவரின் பெயர் முருகேசன் (30) என்றும், கத்தியால் குத்தியவர் பெயர் ராஜேஷ் (35) என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முருகேசன் நேற்றிரவே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷிடம் ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் பிச்சைக்காரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட திடீர் சண்டை மற்றும் கத்திக்குத்து சம்பவங்களால் அங்கிருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.