ஆட்சி இருப்பதால் தான் அதிமுக உயிரோடு இருக்கிறது : டி.டி.வி தினகரன்
ஆட்சி இருப்பதால் தான் அதிமுக உயிரோடு இருக்கிறது என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஆட்சியில் இருப்பதால்தான் அதிமுக இன்னமும் உயிரோடு இருக்கிறது. ஆட்சி கலைந்தால் எல்லோரும் எங்களிடம்தான் வருவார்கள் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழக அரசு மக்களை அனைத்து விஷயத்திலும் துன்புறுத்தி வருகிறது.
சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக, இதுவரை மக்களிடம் எந்தக் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. இதை தொடர்ந்து அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்த திட்டத்திற்காக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அமமுக சார்பில் 6ம் தேதி திருவண்ணாமலையிலும், 9ம் தேதி அரூரிலும் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், போலீஸ் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
நீதிமன்றம் சென்று அதற்காக அனுமதியை வாங்கி வருவோம். நிச்சயம் சேலம் சென்னை பசுமைவழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடக்கும். தமிழக அரசு மக்களுக்கு தொடர்ந்து பிரச்னைகளை மட்டுமே கொடுத்து வருகிறது.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 90% பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பதால்தான் அதிமுக உயிரோடு இருக்கிறது. ஆட்சி முடிந்ததும் அனைவரும் எங்களிடம்தான் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.