பினாமி எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்ற வேண்டும்... மு.க. ஸ்டாலின் ஆவேசம்
தமிழகத்தில் பினாமி எடப்பாடி பழனிசாமி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டது குறித்து ஜனாபதியை சந்தித்து முறையிட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார்.
கடந்த 18ம் தேதி சட்டசபையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். அதனை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க டெல்லி புறப்பட்ட ஸ்டாலின், சென்னை விமான நிலையம் வந்தார்.
ஜனாதிபதியிடம் புகார்
அப்போது, குடியரசுத் தலைவரை சந்திக்கும் போது சட்டசபையில் திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்தும் விளக்க உள்ளேன் என்று ஸ்டாலின் கூறினார். மேலும், அங்கு நடைபெற்ற ஜனநாயக படுகொலை குறித்து எடுத்துரைக்க போவதாகவும், தமிழகத்தில் பினாமி ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
தொடர் போராட்டம்
சட்டசபையில் நடைபெற்ற அக்கிரமங்கள், அநியாயங்கள் குறித்தும், சபாநாயகரின் அதிமுக சார்பு நிலைப்பாடு குறித்தும் ஏற்கனவே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்துள்ளோம். தொடர்ந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பினாமி ஆட்சி
சசிகலா ஆதரவு பெற்ற பினாமி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடையே எதிரொலிக்கும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
நீதி கேட்டு..
இதனைத் தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் திமுக எம்பிகளுடன் ஜனாதிபதியை சந்திக்க மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சென்று ஜனாதிபதி பிராணப் முகர்ஜியை சந்தித்து அதிமுக அரசு குறித்தும், சட்டசபையில் நடைபெற்ற தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளனர்.