எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதால் தென் மாவட்டங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!
Recommended Video
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், தென் மாவட்ட மக்களுக்கு மருத்துவம் மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்களை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை, தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்திந்திய மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்ட்டிடியூட் (AIIMS) அமைக்கப்பட உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது.
15 மாவட்டங்களுக்கு பலன்
அதில் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை, ஈரோடு பகுதி மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், மதுரையில் எய்ம்ஸ் அமைவதன் மூலம், வளர்ச்சியற்ற தென் மாவட்டங்களுக்கு வளர்ச்சி கிடைக்க வழி ஏற்படும் என பல அமைப்புகள் வரவேற்றுள்ளன. மதுரை மட்டுமின்றி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உட்பட சுமார் 15 தென் மாவட்டங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையால் பலன் பெறும்.
நிலை மோசம்
இங்கு பேறுகால நேரத்திலான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்புவிகிதம் பிற பகுதிகளைவிட அதிகமாக உள்ளது. இந்த நிலையை போக்க எய்ம்ஸ் வருகை உதவும் என்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள். மக்கள் இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறுகையில், கடந்த 20 மாதங்களாக எங்கள் அமைப்பின் மூலம் மதுரையில் எய்ம்ஸ் வர வைக்க முயற்சிகளை மேற்கொண்டோம்.
பலரும் உறுதுணை
மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் மூலம் இணைந்து முயன்றோம். அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பங்களிப்பை மறக்க முடியாது. மதுரை எம்.பி.கோபாலகிருஷ்ணனுக்கும் நனஅறி தெரிவிக்கிறோம். இவர்கள் எல்லாருமே, பல முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நாங்கள் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தனர் என்றார்.
அண்டை மாநிலம், நாடு
தென் தமிழகத்தை சேர்ந்த சுமார் இரண்டரை கோடி மக்களுக்கு இந்த மருத்துவமனை வரப்பிரசாதமாகும். கேரளா அல்லது இலங்கையில் இருந்தும் கூட மதுரை வந்து சிகிச்சை பெற நோயாளிகளுக்கு வசதி. ஒரு மணி நேர விமான பயணத்தில், திருவனந்தபுரம், கொச்சி, கொழும்புவில் இருந்து மதுரை வந்தடைய முடியும் என்பது சிறப்பு.
வேலைவாய்ப்பு
மணிமாறன் மேலும் கூறுகையில், எய்ம்ஸ் வருகையால் ஏற்படும் முக்கியத்துவம் காரணமாக, மதுரை மண்டலத்தில் ரூ.5000 கோடி அளவுக்கான முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் நேரடி மற்றும் மறைமுகமாக பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். ஆரோக்கியம் சார்ந்த துறைகள் மட்டுமின்றி, பிற துறைகளும் வளர்ச்சியடையும் என்றார்.
சமச்சீர் வளர்ச்சி
வறட்சி, ஆலைகள் இல்லாமை போன்றவற்றால், தென் தமிழகத்து மக்கள் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் அல்லது சென்னைக்கு வேலை தேடி போய்விடுகிறார்கள். அங்கெல்லாம் இட நெருக்கடி ஏற்படுகிறது. எனவே தென் தமிழக வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் நெல்லை உட்பட எந்த ஒரு மாநகராட்சியிலும் கூட கோவை, சென்னையை ஒப்பிடும் அளவுக்கு உயர்தர சிகிச்சைகள் வழங்கும் மருத்துவமனைகள் இல்லை. எனவே பல பொதுமக்கள் நல்ல சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.