ஜெ.வுக்குத் தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா... தமிழகத்தில் அதிரடி "பெட்டிங்"...!
சென்னை: பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து தமிழகத்தில் திமுக, அதிமுகவினர் இடையே பெட்டிங் நடந்து வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய அளவில் இந்த பெட்டிங் நடந்து வருவதாகவும், பணம், பொருள், தங்கம் என்று இதில் பெட் வைக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
செப்டம்பர் 20ம் தேதி முதல்வர் மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடக்குமோ..
அம்மா விடுதலை ஆவாரா அல்லது தண்டனை கிடைக்குமா என்ற பரபரப்பில் அதிமுகவினர் உள்ளனர். மேலும் தண்டனை அதிகமாக இருந்தால் அவர் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் பேசப்படுவதால் அதுவும் அதிமுகவினரை கலங்கடித்துள்ளது.
கிடைக்குமா.. கிடைக்காதா
இந்த நிலையில் ஜெயலலிதா விடுதலை ஆவாரா, ஆக மாட்டாரா, தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என்பதை வைத்து தமிழகத்தில் திமுகவினரும், அதிமுகவினரும் பெட்டிங்கில் ஈடுபடுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மறுபடியும் ஓ.பி.எஸ் வருவாரா...
இதில் முதல்வருக்குத் தண்டனை கிடைக்காது என்று அதிமுகவினரும், கிடைக்கும் என்று திமுகவினரும் பெட் கட்டுகின்றனராம். அதேபோல ஜெயலலிதா பதவி பறி போகும், மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராவார் என்றும் சில இடங்களில் பெட் கட்டுகின்றனராம். இதை மறுத்து அதிமுகவினர் பெட் கட்டுகின்றனராம்.
வீடு வாசல் நகை, பணம்
இந்த பெட்டில் பணம், நகைகள், வீடு, நிலம், கார் என்று பல பொருட்களை பெட்டாக வைத்து வருகின்றனராம்.
செப்டம்பர் 19ம் தேதி கையில் காசு
தீர்ப்பு செப்டம்பர் 20ம் தேதி வரவுள்ள நிலையில் 19ம் தேதியே பந்தயம் கட்டிய பொருட்களை "நடுவர்களிடம்" ஒப்படைத்து விட வேண்டுமாம். தீர்ப்பைப் பொறுத்து அதை வெல்பவர்களிடம் அந்த நடுவர்கள் ஒப்படைப்பார்களாம்.
இது "அம்மா"வுக்குத் தெரியுமா....?