அதிமுகவா திமுகவா... பரபரக்கும் தேர்தல் பெட்டிங்!
சென்னை: ஐஸ்வர்யா ராய்க்குப் பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதற்கே ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் பெட்டிங் வைத்தவர்கள் இந்தியர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கப் போவது யார் என்பதில் பெட் கட்டாமல் இருந்துவிடுவோமா...
இதோ தமிழகத்தில் அடுத்த ஆட்சியமைக்கப் போவது அம்மா தலைமையில் அதிமுகவா, அல்லது அய்யா தலைமையில் திமுகவா என்ற பெட்டிங், சென்னை மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சத்தமின்றி நடந்து வருகிறது.
ஆட்சியமைக்கப் போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். ஆனால் இதை வைத்து கடந்த இரு தினங்களாக பந்தயம் கட்டுவது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நண்பர்களுக்குள் நூறு, ஆயிரம் எனத் தொடங்கிய பெட்டிங், திருப்பூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் கோடிகளில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
சில இடங்களில் குறிப்பிட்ட தொகுதியில் ஜெயிப்பது யார் என்ற அளவில் பெட்டிங் நடக்கிறதாம்.
பெரும்பாலானோர் ஜெயிக்கப் போவது திமுகவா அதிமுகவா என்றுதான் பந்தயம் கட்டியுள்ளார்களாம். சில விஐபி தொகுதிகளில் மநகூவை மையப்படுத்தியும் இந்த பந்தயம் அமைந்துள்ளதாம்.
ஆனால் இது தொடர்பாக யாரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் இல்லை.