திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கம்!
திருவண்ணமாலை: கார்த்திகை தீபத் திருவிழாயையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. கோவிலில் கூடியிருந்த லட்சகணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் கார்த்திகை திருவிழாவையொட்டி பரணி தீபம் ஏற்றப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் பெருமை கொண்ட தலம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் போற்றப்படுகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் நடைபெறம் மகாதீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும்
இந்த விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மகாதீப திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலையில் பரணி தீபம்
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பஞ்சமூர்த்திகள் தரிசனம்
மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதைத்தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மலை மீது மகாதீபம்
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜொலிக்கும் அண்ணாமலை கோவில்
மலைமீது தீபம் ஏற்றப்பட்ட பின்னர் கோவிலில் விளக்குகள் போடப்பட்டன. வான வேடிக்கைகள் நடைபெற்றன. மின் விளக்கு ஒளியில் அண்ணாமலையார் ஆலயம் தேவலோகம் போல ஜொலிப்பதை பக்தர்கள் கண்குளிர கண்டு தரிசிக்கின்றனர். மலைமீது ஏற்றப்பட்ட தீபம் 11 நாட்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் என்பது சிறப்பம்சமாகும்.