பாரத் பந்த்... ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடியது! #BharatBandh
திண்டுக்கல்: தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பாரத் பந்த்தால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 300 டன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
இன்றைய நாடுதழுவிய வேலைநிறுத்தம் காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை இன்று செயல்படவில்லை. இதனால் ரூ.6 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. கேரளாவுக்கு அதிகளவு காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று அங்கு அனைத்து கடைகளும் மூடப்படும் என்பதால் கேரள வியாபாரிகள் நேற்று காய்கறி வாங்க வரவில்லை.
இதனால் 110 டன் காய்கறிகள் விற்பனை முடங்கியது. நாள்தோறும் விறுவிறுப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் சந்தை வேலைநிறுத்தம் காரணமாக இன்று வெறிச்சோடி காணப்பட்டது.