சென்னையில் நாய்க்கும், கழுதைக்கும் கல்யாணம்... சீர்வரிசையா வாழைக்காய், வாழைப்பூ!#valentinesdayprotes
சென்னையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் இந்து முன்னணியினர் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
Recommended Video
சென்னை : காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னையில் பாரத் இந்து முன்னணியினர் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர். மேளதாளத்துடன் சீர் வரிசையாக வாழைக்காய், வாழைப்பூ, உருளைக்கிழங்கு வைத்து இந்த திருமணத்தை நடத்தினர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த கொண்டாட்டத்திற்கு இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் காதலர் தினம் தேவையா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இன்றைய நாளில் மக்கள் அதிகம்கூடும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று வற்புறுத்துவதையும் இந்து அமைப்பினர் வழக்கமாக வைத்துள்ளனர். காதலர் தின கொண்டாட்டங்களும் அதற்கு எதிர்ப்புகளும் ஆண்டுதோறும் வாடிக்கையானதாகிவிட்டது.
இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட பாரத் இந்து முன்னணி அமைப்பினர் இன்று சூளைமேட்டில் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த திருமணத்திற்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையாக வாழைக்காய், வாழைப்பூ, உருளைக்கிழங்கு உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தன.
நாய்க்கும் கழுதைக்கும் கழுத்தில் பூமாலை போட்டு இரண்டிற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 14ல் காதல் என்ற பெயரில் காமமான காதலும் கள்ளக்காதலையும் கண்டித்து இந்த திருமணம் என பாரத் இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
உண்மைக் காதலை போற்றிடுவோம், அதே சமயம் இந்து கலாச்சாரத்தையும் காத்திடுவோம் என்றும் அவர்கள் அச்சடித்து துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.