பாரத் பந்த்: புதுவையில் 100% ஆதரவு.. பஸ்கள் ஓடவில்லை.. பள்ளிகளும் மூடல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று பாரத் பந்த் முழுமையாக அனுசரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அதை கண்டு கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து இன்று பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் இந்த பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
காலை 9 மணிக்கு தொடங்கிய பந்த் பல மாநிலங்களிலும் முழு அளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புதுச்சேரியிலும் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் இருந்தது. அங்கு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் பள்ளிகளும் திறக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன.
புதுச்சேரி முழுவதும் பந்த் வெற்றிகரமாக நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.