வந்தவாசியில் மகாகவி பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா
வந்தவாசி: வந்தாசியில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் 95-ஆவது நினைவு தின சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எஸ்.ஆர்.எம். இன்போடெக் கணினிப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர்கள் பா.சீனிவாசன், வந்தை குமரன், எஸ்.கார்த்திகேயன், எ.மோகன்தாஸ், ஓசூர் ஷபி உள்ளிட்டோர் கவிதைகள் வாசித்தனர். வந்தவாசி சன்னதி மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் நேமி.பாஸ்கரதாஸ், பாரதியின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்.
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் 'பாரதி எங்கள் சாரதி' எனும் தலைப்பில் கவிதை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "மன்னர் வரலாற்றை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த தமிழ்க் கவிதையில், மக்கள் வரலாற்றையும் எழுதிய பெருமைக்குரியவன் பாரதி. அனைத்து உயிர்களும் சமம் எனும் பொதுவுடைமைச் சிந்தனையும், ஆணும் பெண்ணும் சமம் எனும் சமத்துவச் சிந்தனையும் உடையவர் பாரதியார். தனது பாடல்களில் சமூக விடுதலைக் கருத்துக்களை மிகுதியாய் பாடினார்.
ஆங்கிலேயர்களின் ஏதேச்சதிகார செயல்பாடுகளை தனது படைப்புகள் வழியாக சாடினார். முதன்முதலாக 'இந்தியா' எனும் இதழில் தான் கேலிச்சித்திரங்களை பாரதி வெளியிட்டார். 'ரெளத்திரம் பழகு' என்றும், 'அச்சமில்லை அச்சமில்லை...' என்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடும் போர்க்குணமிக்க வரிகளைத் தந்த மகாகவி பாரதியின் சிந்தனைகளை நம் எண்ணத்தில் ஏந்தி, புதிய சமுதாயம் படைப்பதற்கான பயணத்தைத் தொடர்வோம்" என்று பேசினார். நிகழ்வில், கவிதை வாசித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.