அன்று ஸ்வாதி.. இன்று பவானி.. இன்னும் எத்தனை அப்பாவிகள் சாகப் போகிறார்கள்... குமுறும் உறவினர்கள்!
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற அப்பாவிப் பெண் பலியானார். இன்று கணவர், இரு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்த எங்களது பவானியை இழந்து நிற்கிறோம். இப்படிப்பட்ட கொடும் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை சுட்டுத் தள்ள வேண்டும் என்று பவானியின் உறவினர்கள் குமுறியுள்ளனர்.
பவானியின் மரணம் அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. பவானியின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வேதனையில் உள்ளனர்.
பவானியின் உடல் சென்னை வந்து சேர்ந்த நிலையில் அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.
காரைக்குடியிலிருந்து சென்னைக்கு
பவானி - பாலன் தம்பதியின் சொந்த ஊர் காரைக்குடியாகும். சென்னையில் டயர் கடை நடத்தி வருகிறார் பாலன். அண்ணா சாலையை ஒட்டியுள்ள பார்டர் தோட்டம் பகுதியில் இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இரு பிள்ளைகள்
பாலன் - பவானி தம்பதிக்கு 14 வயதில் பரத் என்ற மகனும், 11 வயதில் லட்சுமி தேவி என்ற மகளும் உள்ளனர்.
பிள்ளைகள் மீது கொள்ளைப் பாசம்
பவானி, தனது இரு பிள்ளைகளிடமும் கொள்ளைப் பாசம் வைத்திருந்தார். பிள்ளைகள் இருவரும் நன்றாகப் படித்து சமூகத்தில் மிகப் பெரியவர்களாக நடமாட வேண்டும் என்று ஆசை ஆசையாக கூறி வருவாராம்.
மகனை கால்பந்து வீரராக்க ஆர்வம்
அதிலும் தனது மகனை சிறந்த கால்பந்து வீரராக மாற்ற வேண்டும் என்று சபதமே செய்திருந்தாராம். காரணம், பவானிக்கு கால்பந்து விளையாட்டு என்றால் உயிராம். தனது தாயின் ஆசைக்கேற்ப மகன் பரத்தும் கால்பந்தில் நாட்டம் கொண்டவராக வளர்ந்து வருகிறார்.
நடுத்தரக் குடும்பம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பவானி - பாலன் தம்பதியினர் மிகவும் அன்பானவர்கள். அமைதியானவர்களாம். அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகுவாராம் பவானி.
உறவினர்கள் குமுறல்
பவானியின் மரணம் அவரது குடும்பத்தையும், உறவினர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், பாலன் - பவானி தம்பதி, இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பவானி இறந்த செய்தி, எங்கள் மனதில் இடிபோல் இறங்கிவிட்டது. சென்னை சென்ட்ரலில் ஸ்ருதி, பெங்களூரில் பவானி என, அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதிகளை போலீசார் சுட்டு தள்ள வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.