இளைஞர்கள் அட்டூழியம்... பைக் ரேஸில் பெண் ஒருவர் அநியாய பலி! - வீடியோ
இளைஞர்கள் முன் அனுமதி பெறாமல் சாலையில் பைக் ரேஸ் நடத்தியுள்ளனர். அதில், மீனா என்ற பெண் மீது பைக் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை: சென்னை ஆழ்வார் திருநகரிலிருந்து மெரினா கடற்கரை வரை இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தியபோது, இருசக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஆழ்வார் திருநகரில் இருந்து மெரினா கடற்கரை வரை சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரத்தில் நடந்த சென்ற மீனா, யசோதா என்ற பெண்கள் மீது பைக் மோதியுள்ளது.
இதில் மீனா நெடுந்தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயமடடைந்துள்ளார். யசோதா என்பவரும் பலத்த காயமடைந்துள்ளார். இதில் மீனா மரணமடைந்துவிட்டார். யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பைக் ரேஸில் ஈடுபட்ட முகமது இஸ்மாயில் மற்றும் பிரபு என்கிற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ரேஸில் ஈடுபடட் மற்ற நால்வரும் தப்பித்துவிட்டனர். போலிசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
சென்னையில் வார இறுதிநாட்களில் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் கடற்கரை சாலையில் பைக் ரேஸ் நடத்துகின்றனர். அப்போது வண்டியை அதீத வேகத்தில் ஓட்டுகிற போது விபத்து ஏற்படுகிறது. போலீசார் இதனை கட்டுப்படுத்த முயல வேண்டும் என பொதுமக்கள் நெடுநாளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.