போகின்னா இப்படியா?... சென்னை மக்களை திணறடிக்கும் புகைமண்டலம்!
சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் பழைய பொருட்களை எரித்து மாசு ஏற்படுத்தியதால் பலரும் சுவாசப் பிரச்னைகளால் அவதியுற்றனர்.
சென்னை : போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்து மாசு ஏற்படுத்தியதால் புகைமண்டலம் சூழ்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் சுவாசப் பிரச்னையால் அவதியுற்றனர்.
மார்கழி மாதம் கழிந்து தை மாதம் பிறப்பதையொட்டி இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதல் புதியன புகுதல் என்று பழைய தீய சிந்தனைகளை ஒழித்து மனதில் புதிய சிந்தனைகளை வளர்ப்பதே இதன் சிறப்பு.
ஆனால் போகி என்றாலே தேங்கிக் கிடக்கும் பழைய குப்பைகளை எரித்து விடுவது என்று நினைத்து பலரும் பழைய பொருட்களை எரித்து தள்ளியுள்ளனர். இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் காலை 9 மணி வரை இருள் சூழ்ந்தே காணப்படுகிறது.
புகைமண்டலத்தால் சூழ்ந்த சென்னை
பனி மூட்டத்துடன் புகை மண்டலமும் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. எதிர் இருப்பது கூட தெரியாத அளவிற்கு புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள புகையால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டன. காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகளும் வாகனத்தை ஓட்ட முடியாமல் சிரமப்பட்டனர்.
தீபாவளியைத் தொடர்ந்து இன்றும் காற்று மாசு
புகைமண்டலம் களைய பகல் 12 மணியாகிவிடும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததன் காரணமாக அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டது. அதே போன்று இன்றும் அதிக அளவில் புகை மண்டலம் சூழ்ந்திருப்பது கடந்த ஆண்டை விட காற்று மாசை அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.
இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தலாமா?
பண்டிகைகள் என்பது சந்தோஷத்திற்காக கொண்டாடப்படுபவை அதனை மறந்து இயற்கைக்கு நாம் தீங்கு ஏற்படுத்தினால் அதன் விளைவை சந்திக்க நேரிடும். தொடர்கதையாகி வரும் காற்று மாசுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் மனம் வைத்தால் மட்டுமே முடியும்.