துயரங்களை ”போக்கி”... செல்கிறது “போகி”- நாளை தை பிறக்கும்... வழியும் பிறக்கும்!
சென்னை: தமிழகத்தில் போகிப் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. இன்று அதிகாலையிலேயே மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தி மார்கழிக்கு விடை கொடுத்தனர்.
பொங்கல் திருநாளுக்கு முந்தை நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி கொண்டாடப்படுகிறது.
பழைய துயரங்களை அழிப்பதற்கான இந்தப் பண்டிகையைப் "போக்கி" என்று பழங்காலத் தமிழர்கள் அழைத்தனர். அந்தச் சொல் பிறகு போகி என்று மருவியது.
பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. ஒருங்கிணைந்த தூய்மைப் பணியினை ஒட்டுமொத்த மக்களும் ஈடுபடும் ஒரே நேரமிது.
தூய்மையே முக்கியம்:
குப்பைகளை தீயில் எரிப்பது, போகியன்று மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம். கடந்த ஆண்டுகளில் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய அக்கறைகளால் அந்த வழக்கம் பலரால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுப்புற விழிப்புணர்வு:
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக போகிப் பண்டினை தினம் மாறி வருகிறது. தூய்மையை எடுத்துரைக்கும் போகி, சுற்றுப்புற பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உருவெடுத்து வருவது பெருமைக்குரியது.
சுவாச பிரச்சினைகள்:
தற்போது போகி தினத்தன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களை எரிக்கும்போது நச்சுப் புகை வெளியேறும். இதனால் பொதுமக்களுக்கு சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
டயர், பிளாஸ்டிக் வேண்டாமே:
மேலும், நச்சுக் காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப் புகை கலந்த பனி மூட்டத்தால் விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது. காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே போகிப் பண்டிகையின் போது டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களை எரிக்க வேண்டாம்.