போகியால் எழுந்த புகைமண்டலம்: சென்னையில் விமானங்கள் தாமதம்
சென்னை: போகி பண்டிகை கொண்டாடிய சென்னைவாசிகள் பழைய பொருட்களை எரித்த காரணத்தால் சென்னை முழுவதும் புகை மண்லம் சூழ்ந்தது. இதனால் விமான போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது.
போகி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் போகிப் பண்டிகையையொட்டி பழைய பொருட்கள் மற்றும் துணிகளை பொதுமக்கள் நேற்றிரவு முதலே தீ வைத்து கொளுத்தினார்கள். இதனால் சென்னை முழுவதும் இன்று அதிகாலையில் காலையில் புகை மூட்டமாக காணப்பட்டது.
சென்னைவிமான நிலையத்தின் ஓடுபாதையில் புகை மூட்டத்தால்,டெல்லி, கொச்சி, பெங்களூரு செல்லும் விமானங்கள் புறப்படுவதிலும், மஸ்கட், அபுதாபியிலிருந்து வரும் விமானங்கள் வந்து சேருவதிலும் தாமதம் ஏற்பட்டது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது.
இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் உதவியுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த 4-5 வருடங்களாக பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரப்பர் டயர், டியூப் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.
இந்த வருடமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்கள், டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும், விழிப்புணர்வினை ஏற்படுத்துவது குறித்த துவக்க விழா நேற்று நடைபெற்றது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் . தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் போகி பண்டிகையின் போது ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் போகிப் பண்டிகையின்போது கடைபிடிக்க வேண்டிய உறுதிமொழியினை வாசிக்க மாணவ மாணவிகள், பொதுமக்கள், அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியரிடம் போகி பண்டிகையின்போது பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
ஆனாலும் மக்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் பழைய பொருட்களை எரித்து போகியை கொண்டாடி தீர்த்தனர்.