இந்திரனை போற்றும் போகிப் பண்டிகை.. தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்..!
சென்னை: தமிழகத்தில் இன்று போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒருசில இடங்களில் டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டதால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை தமிழகத்தில் இன்று அதிகாலையில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் ஏராளமானோர் கனல் மூட்டி மேளம் கொட்டி பழையன கழித்து போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு சில இடங்களில் பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் ஆகிய பொருட்கள் எரிக்கப்பட்டதால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களது இல்லம் முன்பு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி போகி திருநாளை கொண்டாடினர். பழைய தீய எண்ணங்கள் மறைந்து புதிய நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.