விண்ணை முட்டிய சென்னை போகி கொண்டாட்டம்.. விமான சேவை முடங்கியது.. ரயில் சேவை பாதிப்பு!
சென்னை: போகி பண்டிகையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக பயணிக்கின்றன, வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.
மார்கழி மாத பனி ஒருபக்கம் என்றால் போகியால் ஏற்படுத்தப்பட்ட நெருப்பிலிருந்து உருவான புகை மூட்டம் மறுபக்கம் என, இன்று அதிகாலை முதல் சென்னையை திணற வைத்துவிட்டது.
கடும் பனி மற்றும் புகை மூட்டத்தால், சென்னையில் விமானசேவை அதிகாலை 3 மணி முதல் முடங்கியுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோன்ற நிலை சென்னைக்கு ஏற்பட்டிருந்தது.
திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
சென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் காலை 8 மணிவரையில் புறப்படவில்லை. இதனால் சென்னைக்கு வர வேண்டிய மற்றும் சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய விமான பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
வாகன ஓட்டிகள்
பனி மூட்டம், போகியால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சென்னையில் வாகன ஓட்டிகளும் திணறினர். முகத்தில் கர்ச்சீப்பை கட்டியபடி இரு சக்கர வாகனங்கள் இயக்கியவர்களை பார்க்க முடிந்தது. காலையிலும் கூட கார், பைக்கில் சென்றோர் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றனர்.
ரயில் சேவை தாமதம்
அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதால் சென்னை, அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் அரை மணி நேரம் தாமதமாகின. இதனிடையே, காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு
சென்னையின், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு மீண்டும் புகை மூட்டம் ஏற்படலாம் என்றும் தெரிகிறது.