மாணவிக்கு புதுவை பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு... சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் தாளாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கதிர்காமம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அந்த பள்ளியின் தாளாளர் ரமேஷ் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் ஆரம்பத்தில் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சமரசப்படுத்த முயன்றதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலையீட்டால் தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால்,தெற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி. வழக்குப் பதிவு செய்யாமல் புகாரை திரும்பப்பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், ரமேஷ் ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதால், புதுச்சேரி அரசில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. எனவே ரமேஷை காப்பாற்றும் முயற்சியில் புதுச்சேரி போலீசார் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி போலீசார் இவ்வழக்கை விசாரித்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்காது.அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற புதுச்சேரி அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட ரமேஷை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு பாதுகாப்பும் அளிக்க வேண்டும். புதுச்சேரி அரசு இதனை நிறைவேற்றாவிட்டால் அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.