கலாம் மணிமண்டபத்தில் கீதை வைக்கப்பட்டதால் சர்ச்சை...குரான், பைபிள் வைத்தார் பேரன் சலீம்
பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல்கலாம் சிலை முன் குரான், பைபிள் புத்தகங்கள் வைக்கப்பட்டன. இதனால் பகவத் கீதை வைக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என தெரிகிறது.
ராமேஸ்வரம்: பேக்கரும்பு மணிமண்டபத்தில் அப்துல் கலாம் சிலை முன் குரான், பைபிள் புத்தகங்களை வைத்தார் அவரது அண்ணன் பேரன் சலீம். இதனால், கலாம் சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சை ஓயும் என தெரிகிறது.
ரூ. 15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திறந்துவைத்தார். இதையடுத்து தினமும் ஏராளமான மக்கள் அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வந்து செல்கிறார்கள்.
#BREAKINGNEWS |
— News18 TamilNadu (@News18TamilNadu) July 30, 2017
பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே பைபிள், குரான் புத்தகங்களை வைத்தார் அவரது அண்ணன் பேரன் pic.twitter.com/gc0j7dr3rg
மணி மண்டபத்தில் வீணை வாசிப்பது போன்ற அப்துல் கலாம் சிலை ஒன்றும் உள்ளது. அதன் அருகில் பகவத் கீதை வைக்கப்பட்டிருந்தது.
இதனால் மத ரீதியில் கலாம் மணிமண்டபம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்தன.
இதனையடுத்து, அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம், குரான் மற்றும் பைபிள் புத்தகங்களை கலாம் சிலையருகே வைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கலாம் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்றும் சலீம் குறிப்பிட்டுள்ளார்.