ஆதாரை இணைக்க சொல்லி டார்ச்சர் கொடுத்த வங்கிகளின் மெசேஜ்கள்... அப்பாடா கிடைத்தது நிம்மதி!
வங்கிக்கணக்கு, செல்போனுடன் ஆதார் எண்ணை இணையுங்கள் என்ற டார்ச்சர் மெசேஜ்கள் இனியும் வராது மக்களே நிம்மதியாக இருங்கள்.
Recommended Video
சென்னை : ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, செல்போனுடன் இணைக்க மார்ச் 31 கடைசி நாள் என்று மத்திய அரசு சொன்னாலும் சொன்னது வங்கிகளின் மெசேஜ்கள் நாள்தோறும் மக்களை டார்ச்சர் செய்து வந்தது. அதற்கு உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நாட்டில் உள்ள குடிமகன் ஒவ்வொருவருக்கும் தனியான அடையாள எண் என்று முதன்முதலில் ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. தனி நபரின் அங்க அடையாளங்களான கைரேகைப் பதிவு, கண்விழிப்படலம் பதிவு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒரு அடையாள அட்டையாகத் தான் ஆதார் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த அடையாள அட்டை இருந்தால் தான் மனிதனின் எந்த ஒரு காரியமானாலும் நடக்கும் என்கிற ரீதியில் அரசு ஆதார் அட்டையை அனைத்திற்கும் கட்டாயமாக்கிவிட்டது. பான் அட்டை, அரசின் மானியங்கள் பெற என படிப்படியாக ஆதார் கட்டாயம் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டது.
மார்ச் 31க்குள் இணைக்க அவகாசம்
இதன் கடைசி கட்டமாக வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண்கள் தொடர்ந்து பிரச்னையின்றி செயல்பட வேண்டுமென்றால் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற காலக்கெடு நிர்ணயம் செய்தது. ஆதாரை எல்லாவற்றிற்கும் அவசியமானதாக்க வேண்டுமா என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மேலும் வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண்களுக்கும் ஆதார் எண் இணைப்பு அவசியமா என்றும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மக்களுக்கு ஒரு நற்செய்தியாக ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, செல்போன் எண்ணுடன் இணைப்பதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை என்று கூறியுள்ளது.
நிம்மதி தரும் உத்தரவு
அரசின் சமூக நலத்திட்டங்கள், மானியம் பெற மட்டுமே ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மற்றபடி வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல, இந்த வழக்குகள் மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரை காலக்கெடுவே இல்லாமல் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை மெசேஜ்கள்
ஒருவழியாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தினந்தோறும் வங்கிகள் மற்றும் செல்போன் நிறுவனங்கள் அரசு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளதால் உங்களது சேவை தொடர உடனே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மெசேஜ் மேல் மெசேஜாக அனுப்பி டார்ச்சர் கொடுத்து வந்தன.
இனி டார்ச்சர் இருக்காது
செல்போன், வங்கிகளின் இந்த டார்ச்சர்களில் இருந்து மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. இனி இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை யாரும் ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்த முடியாது. குறிப்பாக அலெர்ட் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் அனுப்பி வந்த மெசேஜ்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.