அடுத்தடுத்த அடிகள்... சரியக் காத்திருக்கிறது சன் டிவி சாம்ராஜ்யம்!!
சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமானது அடுத்தடுத்த நெருக்கடிகளால் மிகப் பெரியவை சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது.
திமுக ஆதரவுடன் தொடங்கப்பட்ட சன் டிவி. அதன் பின்னர் அத்தனை அதிகார பலத்தையும் பயன்படுத்தி வலுவான அஸ்திவாரம் போட்டு பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டது.
இந்த சன் டிவி சாம்ராஜ்யத்தை மக்கள் அதிகம்பேர் விரும்புகிறார்கள் என்ற கட்டமைப்பை உருவாக்க கேபிள் தொழிலிலும் குதித்தது. எஸ்.சி.வி. என்றாலே இதர கேபிள் ஆபரேட்டர்கள் நடுநடுங்கும் வைக்கும் அளவுக்கு ஏகபோகம் கொண்டதாக இருந்தது எஸ்.சி.வி.
ஊடக நிறுவனங்கள் நடுக்கம்..
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மட்டுமல்ல.. பிற மாநில முன்னணி ஊடக நிறுவனங்களும்தான்.. தமிழில் ஒரு தொலைக்காட்சி தொடங்கினால் எஸ்.சி.வி. தயவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.. அவர்கள் நம்மை முடக்கிவிடுவார்கள் என்று அஞ்சியே ஒதுங்கிப் போயிருக்கும் வெளிமாநில ஊடக நிறுவனங்கள் ஏராளம்..
இழுத்தடிப்பு
இந்த வழக்குகள் ஆக முடிந்தமட்டும் எவ்வளவு காலத்துக்கு இழுத்தடிக்கப்படுமோ அவ்வளவு காலத்துக்கு ஜவ்வாக இழுக்கப்பட்ட கதைதான் அரங்கேறிக் கொண்டிருந்தது.. இப்போது காலமும் மாற காட்சிகளும் அதிரடியாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடியும் உச்சநீதிமன்றம் கடிந்து கொண்ட பின்னரும்கூட குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் இருந்து. இப்போது எந்த நேரத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்கிற நிலை உறுதியாகி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தயாநிதி
இதனால்தான் இதுநாள் அவரை எதுவும் நடக்காது என்று கருதிக் கொண்டிருந்த தயாநிதி மாறன் இனி எதுவும் நடக்கலாம் என்று விழுந்தடித்து உச்சநீதிமன்றத்தில் போய், குற்றப்பத்திரிகையில் என் பெயரை சேர்க்கக் கூடாது என்று ஒரு மனுவைப் போட்டு வைத்திருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் நிலை
ஏற்கெனவே மலேசியா ஆவணங்களை விட்டுவிட்டு இருக்கின்ற ஆதாரங்களை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று சொன்னதே உச்சநீதிமன்றம். இருந்தாலும் கதவைப் போய் தட்டியிருக்கிறார் தயாநிதி மாறன்.. தாழ் திறக்குமா என்பது இனிதான் தெரியவரும்.
ஜாமீன் கிடைக்குமா?
அத்துடன் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நீண்ட இழுத்தடிப்பினால் உச்சநீதிமன்றம் அதிருப்தியில் இருக்கிறது,, இதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில் தயாநிதிக்கும் கலாநிதிக்கும் ஜாமீன் கிடைக்குமா என்பதெல்லாம் பெரும் சந்தேகம். இதனால் சன் டிவி குழுமம் சரிவை சந்திக்க ஆயத்தமாகும் நிலைக்கு தள்ளப்படும்.
எஸ்.சி.வி.
இந்த நிலையில் சன் டிவியின் வருவாய்க்கு கவச குண்டலமாக இருந்த எஸ்.சி.வி.க்கு ஆப்பு வைத்திருக்கிறது மத்திய அரசு. எஸ்.சி.வி. முடங்குவதன் மூலம் பல இடங்களில் சன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பே இல்லாமலேயே போவதற்கு அதிக சாத்தியங்கள்.
படுபாதாளத்தில் ரேட்டிங்
அப்படி நிகழும் நிலையில் சன் டிவியின் ரேட்டிங் என்பது படுபாதாளத்துக்கு போய் படுக்கத் தொடங்கும்.
வருவாய் வீழ்ச்சி
ரேட்டிங் குறைந்து போனால் மெல்ல மெல்ல சன் டிவியில் இருந்து விளம்பர நிறுவனங்கள் விலகி எந்த தொலைக்காட்சி ரேட்டிங்கில் முன்னணியோ அங்கே வரிசையில் காத்திருக்க போய்விடும். இதனால் சன் டிவியின் வருவாய் முழுவதுமாக அடிபட வாய்ப்பிருக்கிறது.
இதர சேனல்கள்
சன் குழுமத்தைப் பொறுத்தவரையில் சன் டிவியின் வருவாயில்தான் கேடிவி, சன்நியூஸ், ஆதித்யா இன்ன பிற அத்தனையும் ஓடிக் கொண்டிருக்கிறது.
கட்டமைப்பே இல்லை
அதாவது சன் டிவிக்கான பெரும்பான்மையான கட்டமைப்பையே இதர சேனல்களும் பயன்படுத்தி வருகின்றன. கேடிவி, சன் நியூஸ், ஆதித்யா ஆகியவற்றுக்கு அறைகளும் பணியாளர்களும் உண்டே தவிர பெரும்பான்மை கட்டமைப்பும் வருவாயும் சன் டிவியைச் சார்ந்ததுதான்.
அதனால் பிரதான மூலவரின் வருவாய் படுத்தால் இதர சேனல்களின் கதி கேள்விக்குறியாகிவிடும்.
டிடிஎச்ச்கு மேலே கத்தி தொங்குது
இதற்கு அப்பால் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் பிரதான பங்கு வகிப்பது சன் டிவியின் டிடிஎச்தான். இவ்வழக்கில் சன் குழுமத்துக்கு எதிரான தீர்ப்பு வரும் நிலையில் சன் டிடிஎச் முடக்கப்படவும் கூடும் என்றும் கூறப்படுகிறது.
சரியும் சாம்ராஜ்யம்
சன் டிடிஎச்சும் முடக்கப்பட்டால் ஒட்டுமொத்தமாக சன் டிவி சாம்ராஜ்யம் சரிந்து போவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்கின்றனர் வர்த்தக வல்லுநர்கள்.