சென்னை சில்க்ஸ் தீவிபத்தை எதிர்பார்க்கவே இல்லை .. விக்கிரமராஜா ஷாக்!
சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க நகை மாளிகை தீவிபத்து அதிர்ச்சியளிப்பதாக வணிக சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க நகை மாளிகை கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து விக்கிரமராஜா அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
அதிகாலை 4 மணி முதல் 7 மணி நேரமாக தீ எரிந்து வருவதால் தி.நகர் பகுதி வாசிகள் மத்தியில் பீதி நிலவுகிறது. 7 மாடி கட்டடம் இடிந்து விழும் ஆபத்துள்ளதால் உஸ்மான் சாலை பக்கம் பொதுமக்கள் வரவேண்டாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தீ விபத்து பகுதியை பார்வையிட்ட வணிக சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த தீ விபத்து எங்களுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் முழு மூச்சாக தீயை அணைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் வீரர்கள் தேவை
7 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறார்கள். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தி.நகர் பகுதியில் உள்ள எல்லா கடையிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கும் வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் கூடுதலாக நபர்கள் ஈடுபட்டு தீயை அணைக்க வேண்டும்" என்று கூறினார்.
2வது மாடியில் சுவர் விரிசல்
தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கடையின் இரண்டாவது மாடியில் சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டடத்தின் உள்ளே தீ பயங்கரமாக எரிவதால், கட்டடத்தின் உட்புற சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. வெளிப்புறச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடம் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
டன் கணக்கில் எரிகிறது
கடையில் இருந்த டன் கணக்கிலான துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. தரைத்தளத்தில் உள்ள நகைக்கடையில் ஏராளமான தங்க நகைகள் தீவிபத்தால் சேதமாகியுள்ளது. 6 தளங்களில் வைக்கப்பட்டு இருந்த ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் தீவிபத்தில் நாசமாகியுள்ளது. மேலும் காலணிகள், கைப்பைகள், அலங்கார பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியுள்ளன. இந்த விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதால் துணிக்கடை அதிபர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
போலீஸ் கட்டுப்பாட்டில்
துணிக்கடை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி. நகைக் கடை, நல்லி சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் என்று நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய கடைகள் மூடப்பட்டுள்ளன.
வணிகம் பாதிப்பு
7 மணி நேரமாக தீ எரிந்து வருவதால் வெளியேறும் கரும் புகையால் தி.நகர் மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை, நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 250 நடைபாதைக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிறுவியாபாரிகள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.