'பிக்பாஸில்' நாதஸ்வர கலைக்கு அவமரியாதை... கமல் மன்னிப்பு கேட்க இசை வேளாளர்கள் சங்கம் நோட்டீஸ்!
நாதஸ்வர இசைக் கலைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர்கள் நல சங்கம் நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்ட
சென்னை : இசை வேளாளர்களை இழிவுபடுத்தியதாக விஜய் டிவி, நடிகர் கமல்ஹாசன், நடிகர் சக்தி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர்கள் நல சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஜய் டிவியில் தினந்தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தொடக்கத்தில் 15 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது புதிய போட்டியாளராக பிந்து மாதவியையும் சேர்த்து மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு தினந்தோறும் வித்தியாசகமான டாஸ்க்குகள் அளிக்கப்படும். அப்படி கடந்த 2 வாரங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் நடிகர் சக்திக்கு, நடிகர் சிவாஜிகணேசனின் தில்லானா மோகனாம்பாள் கதாபாத்திரத்தில் நடனமாட பிக் பாஸ் உத்தரவிட்டார்.
அதன்படி சக்தி நடனமாடிய போது நாதஸ்வரத்தை மரியாதை குறைவாக பயன்படுத்தி இசைவேளாளர் சமூகத்தினரை இழிவுபடுத்தி விட்டதாக தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர்கள் நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் டிவி, நடிகர் கமல்ஹாசன், நடிகர் சக்தி, எண்டிமோல் நிறுவனம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தங்களின் வாழ்வாதாரமான நாதஸ்வரத்தை நடிகர் சக்தி மையாண்ட விதமும், அங்கு நடைபெற்ற சம்பங்களும் இசை வேளாளர் சமூகத்தினரின் மனதை பாதித்துள்ளதாக நோட்டீசில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாதஸ்வரம் தெய்வீக கருவி, அதனை மரியாதை குறைவாக நடத்தியதற்காக ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்காவிடில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.