பிலால் மாலிக் நீதிபதி முன்பு ஆஜர்
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக போலீஸ் படையினர், நேற்று ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து அதிரடி சம்பவத்திற்குப் பின்னர் பிடித்தனர்.
இதில் பன்னா இஸ்மாயில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தான். அவனை சென்னை அரசு பொது மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். இன்னொரு நபரான பிலால் மாலிக்கை இன்று வேலூர் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்.
ஏற்கனவே பக்ருதீனை 6 நாள் காவலில் போலீஸார் எடுத்துள்ளனர். அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் பிலால் மாலிக்கையும் விசாரணைக்கு எடுக்கவுள்ளனர் போலீஸார்.