வேலூர் கோர்ட்டில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆஜர்
பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து போலீஸாரால் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பன்னா இஸ்மாயில் குண்டுக் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பிலால் மாலிக்கை இன்று போலீஸார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது தனது வக்கீலுடன் பேச வேண்டும் என்று பிலால் மாலிக் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.
வருகிற 18ம் தேதி வரை பிலால் மாலிக்கை சிபிசிஐடி போலீஸார் தங்களது காவலில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிலால் மாலிக்கை போலீஸார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
போலீஸ் பக்ருதீனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரையும் போலீஸார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். அவரை மேலும் சில நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
போலீஸ் பக்ருதீனும் ஆஜர்
அதேபோல போலீஸ் பக்ருதீனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவரையும் போலீஸார் வேலூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜேஎம்-3 நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார் பக்ருதீன். அவரை வக்கீல்கள் அரை மணி நேரம் சந்தித்துப் பேச நீதிபதி அனுமதித்தார். இதையடுத்து பக்ருதீனிடம் அவரது வக்கீல்கள் ஆலோசனை நடத்தினர்.